யானையை இப்போதுள்ளதை விட மேலும் சிறிது மக்கள் விரும்பும் விலங்காக மாற்றுவது, மனித–வனவிலங்கு மோதல்களால் உருவாகும் பிரச்சனைகளுக்கு நீடித்த நிலையான நிரந்தரத் தீர்வு காண்பது போன்ற நோக்கங்களுக்காக யானைகளுக்காக ஒரு திருவிழாவை விட்லி இயற்கை நிதியம் என்ற அமைப்புடன் இணைந்து 25 ஆண்டுகள் பழமையுடைய, தில்லியைத் தலைமையக மாகக் கொண்டு செயல்படும் சூழல் பாதுகாப்பு அமைப்பான இந்திய வன உயிரி அறக்கட்டளை டிசம்பர் 1 முதல் கேரளா எர்ணாகுளம் கொச்சி துறைமுகப் பகுதியில் நடத்துகிறது.
கலை அம்சங்களுடன் இத்திருவிழா நடைபெறு கிறது என்று வன உயிரி அறக்கட்டளையின் கடல்சார் சூழல் பிரிவுத் தலைவரும், கேரள யானைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான சாஜன் ஜான் கூறுகிறார். தாராளமாக உணவு தேவைப்படும் விலங்கு யானை. உணவிற்காக சில சமயங்களில் இவை பல மைல் பயணம் செய்கின்றன. காடுகள் துண்டாடப்பட்டது இவற்றைப் பெரிதும் பாதித்துள்ளது. இவை செல்லும் வழிகளுக்கு அருகில் போக்குவரத்துப் பாதைகள் உள்ளது பல சமயங்களில் வனவிலங்கு மனித மோதல் களுக்கு வழிவகுக்கிறது.
101 யானைப் பாதைகள்
இந்த அறக்கட்டளையின் தலைமையில் நடந்த ஆய்வின் மூலம் நாட்டில் 101 யானை செல்லும் பாதைகள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பிரதி பலிக்கும் வகையில் அறக்கட்டளை 2018இல் தில்லியில் நடந்த யானைத் திருவிழாவில் நிகழ்ச்சிகளை நடத்தியது. பலதரப்பட்ட பொருட்களைக் கொண்டு உரு வாக்கப்பட்ட 101 யானை சிற்பங்களை பல கலைஞர்கள் செதுக்கிக் காட்சிப்படுத்தினர்.
காட்டானைகள் மூலம் உருவாகும் மோதல்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது பற்றிய விவாதங்க ளும் நடந்தன. 2018 விழாவின் தொடர்ச்சியாக இந்த விழா நடந்தது. இந்த விழா டிசம்பர் 2022இல் முடிந்தது என்றாலும் இது தொடர்புடைய செயல்கள் ஒரு ஆண்டுகாலம் நீடிக்கும். யானைகள் செல்லும் வழியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண்பது என்பதே இவ்விழாவின் முதன்மைநோக்கம். குழந்தை களுக்காக “யானைக் குழந்தை” என்று பெயரிடப் பட்டுள்ள நிகழ்ச்சிகளும் நடக்கும். கலைத்துறையில் யானை, இலக்கியத்தில் யானை போன்ற மையக்கருத்துக்களைக் கொண்ட நிகழ்ச்சி கள் நடக்கின்றன.
யானைச் சிற்பங்கள், ஓவியக் காட்சி கள், கலைஞர்கள் நேரடியாக ஓவியங்கள் வரைதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும். இதற்கு “அந்த யானை” என்று பெயரிடப்பட்டுள்ளது. சுதந்திர நடமாட்டத்திற் கான உரிமை என்ற குறிக்கோளை அறக்கட்டளை முன்வைக்கிறது. தடையில்லாத யானைப் பாதைகள் என்பதே இதன் நோக்கம். யானைகள் செல்லும் பாதைகளுக்கு அருகில் வாகனங்கள் குறைந்த வேகத்திலேயே செல்ல வேண்டும் என்று சட்டம் உள்ளது.
ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படுவது இல்லை. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சமீபத்தில் வாலையாறு பிரதேசத்தில் இரயில் இடித்து யானை உயிரிழந்த சம்பவம். இரயில் பாதைக்கு இரு புறங்களிலும் பயணிகள் வீசியெறியும் உணவுப்பொருள் மிச்சங்கள் குவிந்து கூடுவதே யானை களை இரயில் பாதைகளை நோக்கி வர முக்கியக் காரணம். இரயில்வே துறை ஏற்படுத்திய சட்டங்கள் கூட அவர்களாலேயே மீறப்படுகின்றன. வனங்களுக்குள் யானைகள் கடந்து செல்லும் பாதைகளில்கூட இந்த சட்டங்கள் சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
சுதந்திரமாக காட்டில் வாழும் யானைகள் மீது மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. சங்கிலி யால் பிணைக்கப்பட்டு ஊருக்குள் இருக்கும் யானை கள் மீது மட்டுமே மக்களுக்கு பரிதாபம் உள்ளது. காட்டானைகள் இதில் இடம்பெறுவது இல்லை. வன உயிரி அறக்கட்டளை நடத்திய ஆய்வுகளின் போது வயநாட்டில் யானைகள் பயணிக்கும் பாதை களுக்கு அருகில் சுமார் பத்து வீடுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அறக்கட்டளையின் பொருளாதார உதவியுடன் இங்கு வாழ்ந்த மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் வழங்கப்பட்டன.
இவர்கள் வாழ்ந்த நிலப்பகுதியை அறக்கட்டளையே வாங்கி வனத்துறையினரிடம் கொடுத்தது. இது யானைகளால் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வந்த பகுதி. இது போன்ற தீர்வுகளால் யானைகளும், மனிதர்களும் மோதல்கள் இன்றி நிம்மதியாக வாழமுடிகிறது. பாக்டீரியா முதல் யானை வரை உயிரினங்கள் இல்லாத பூமியில் மனிதனால் ஒருபோதும் வாழ முடியாது. இது போன்ற விழாக்கள் இந்த தும்பிக்கை உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்த உதவட்டும்.